வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதே நம் தமிழ் மரபு. அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு நினைவாய் கல் ஒன்றை நட்டு வழிபடும் வழக்கம் என்பதே நம் தமிழினத்தின் முதன்மை வழிபாடாய் இருந்தது. இப்படியான வழிபாட்டு முறையியல் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு தென்புலத்தில் மாந்தனின் தடயம் கிடைக்கும் காலம் தொட்டே இங்கு வாழ்த்த மாந்தரான தமிழரிடம் பழமை வாய்ந்ததாய் கலந்துள்ளது.
நம் பண்பாட்டின் வெளிப்பாடான சங்க இலக்கியங்கள் இந்நடுகல் வழிபாட்டை நமக்கு கண் முன்னே எடுத்துரைக்கின்றன.
பொதுவாக நடுகல் என்றழைக்கப்பட்டாலும், இவற்றுள் பல வகைகள் உள்ளன. எந்த காரணத்திற்காக நடப்பட்டதோ அதை பொருத்தும், அதன் அமைப்பை பொருத்தும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. இப்படியான பலவகை நடுகற்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் (காரணம் இப்பகுதிகளும் ஒரு காலத்தில் தமிழ் மரபில் இருந்தவையே என்பதால் வியப்பில்லை) மட்டுமே முக்கியமாகவும் அதிகமாகவும் கிடைக்கின்ற.
இப்படியான தமிழர் மரபான நடுகல் தமிழ் தேசமெங்கும் கிடைத்தாலும் தமிழ் தேசத்தின் ஒரு பகுதியில் மட்டும் இதுநாள் வரை பண்டைய நடுகற்கள் கிடைத்தாக பெரிதும் எந்த ஆய்வு பதிவுகளும் வரவில்லை! ஆச்சரியம்! எப்படி அங்கு மட்டும் இல்லாமல் இருக்கும்!?
விடை தேடி எமது பயணம் ஈழம் நோக்கி அமைந்தது! பல நாள் கனா! ஈழத்தில் தமிழர் தொல்லியல் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஆய்வு செய்ய வேண்டுமென்று! வாய்ப்பும் அமைந்ததே அவ்வீர மண்ணை தொட்டு பார்க்க! பண்டைய நடுகல் வீரர்களுக்கு ஒரு படி இல்லை இல்லை பல படி மேலே சென்று மாவீரரானவர்களின் நிலத்திற்கு சென்றேன்!
ஆனால் இன்றோ, பண்டைய நடுகற்களும் இல்லை! எம்மின மாவீரர்களின் நடுகற்களும் இல்லை! காலம் என்ன என்ன செய்துள்ளது! எம் வரலாற்றை காக்க எம்மினத்திற்கு மீண்டும் நாடு கட்ட போ(ர்)ராடி நடுகல்லாய் மாறி நின்றவர்களின் தடயங்களுடன் பண்டைய நடுகற்களும் அழிக்கப்பட்டுவிட்டன என்றே சொல்லலாம்!
இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டது அவற்றை வெளியிட்டது பெரிதும் ஆங்கிலேயர்கள் தான்! அதன் பிறகு வெடித்த இனப்பிரச்சினையில் தொல்லியல் ஆய்வுக்கெல்லாம் நேரமிருக்கவில்லை! ஆனால் ஆய்வு செய்து அழிக்க அவர்களுக்கு நேரமிருந்தது! இவற்றை பற்றியும் அங்கு நிலவும் அரசியல் பற்றியும் வேறு பதிவில் விரிவாய் காண்போம். இப்படியான தொல்லியல் ஆய்வுகள் தமிழருக்காக முடக்கிவிடப்பட பெரிதும் நேரமும் வாய்ப்பும் இல்லாமல் இருந்தமையால் இப்படியாக இலங்கையில் உள்ள நடுகற்கள் ஆவணப்படுத்தப்படவில்லை.
எனது கடந்த மாத ஈழ பயணத்தின் போது நண்பர் பிரதீவன் உதவியுடன் கி.பி.1900 ஆண்டிற்கு(100 ஆண்டுக்குட்பட்டது தான்) பிறகு கல்வெட்டாய் வைக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டது.
இவை இன்றி 2 நடுகற்கள் பொள்ளாறுவை தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை அடையாளம் கண்டேன்! ஆனால் அவை நடுகற்கள் என்று அடையாளப்படுத்தப்படாமல் ஏதோ ஒரு சிற்பம் என்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக எனது இந்த ஈழ பயணத்தில் இந்த 5 நடுகற்களை அடையாளம் கண்டுள்ளேன்! இவ்வைந்து நடுகற்கள் பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்!